சென்னை: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் இன்று சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகப் பகுதியில் வளி மண்டலத்தின் மேலடுக்கில் காற்றின் சுழற்சியின் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமானது முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கையும் இல்லை.
காஞ்சிபுரம், விழுப்புரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கனமழையோ மிக கனமழையோ பெய்யக்கூடும்.
சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 17 செ.மீட்டரும், கடலூரில் 13 செ.மீட்டரும், அரியலூரில் 12 செ.மீட்டரும், திருவாரூர் 11 செ.மீட்டரும், விழுப்புரம் 10 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறினார்.