
சந்திரயான்-2 விண்கலத்திலிருந்து பிரித்துவிடப்பட்ட லேண்டர் விக்ரம் நிலவை சுற்றி வரும் பாதையை மேலும் குறைக்கும் நடவடிக்கையை இந்திய விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகள் (இஸ்ரோ) வெற்றிகரமாக இன்று புதன்கிழமை மேற்கொண்ட நிலையில், நிலவுக்கு மிக அருகாமையில் சென்றுள்ளது விக்ரம் லேண்டர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22-ஆம் தேதி இஸ்ரோ சார்பில் விண்ணுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2, புவி நீள்வட்டப் பாதையிலிருந்து விலகி, நிலவின் நீள்வட்டப் பாதைக்குச் சென்று சுற்றி வருகிறது.
இந்த நிலையில், விண்கலத்திலிருந்து லேண்டர் பகுதியை விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி திங்கள்கிழமை வெற்றிகரமாக பிரித்தனர். அதன் மூலம், விண்கலத்தின் ஆர்பிட்டர் பகுதி பிரிக்கப்பட்ட இடத்தில் இருந்தபடியே, நிலவை நீள்வட்டப் பாதையில் சுற்றி வந்துகொண்டிருக்கிறது.
நிலவின் பரப்பில் தரையிறங்கக்கூடிய லேண்டர் பகுதியானது, நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவிலான சுற்றுப் பாதையில் சுற்றி வந்தது.
இந்த நிலையில், லேண்டரின் நிலவு சுற்றுப்பாதையை குறைக்கும் முயற்சியை விஞ்ஞானிகள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 8.50 மணியளவில் மேற்கொண்டனர். அதன் மூலம், நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் 104 கி.மீ. தொலைவிலான சுற்றுப்பாதைக்கு லேண்டர் கொண்டுவரப்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக சுற்றுப்பாதை குறைப்பு: இந்நிலையில், இன்று புதன்கிழமை அதிகாலை 3:42 மணிக்கு திட்டமிட்டப்படி ஆன்-போர்டு உந்துவிசை முறையைப் பயன்படுத்தி அதன் இன்ஜினை 9 வினாடிகள் இயக்கப்பட்டு லேண்டரின் சுற்றுப்பாதையை மேலும் வெற்றிகரமாக குறைத்தனர். அதன் மூலம், நிலவின் பரப்பிலிருந்து குறைந்தபட்சம் குறைந்தபட்சம் 35 கி.மீ. அதிகபட்சம் 101 கி.மீ தொலைவிலான சுற்றுப்பாதைக்கு லேண்டர் கொண்டுவரப்பட்டுள்ளது. அதேசமயம் ஆர்பிட்டர் குறைந்தபட்சம் 96 கி.மீ, அதிகபட்சம் 125 கி.மீ என்ற நீள்வட்டப்பாதையில் நிலவை சுற்றி வருகிறது.
இரண்டாவது முறையாக லேண்டரின் நிலவு சுற்றுப்பாதையை வெற்றிகரமாக குறைந்த விஞ்ஞானிகள் லேண்டரும் ஆர்பிட்டரும் நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.