கோவில்பட்டி: அரசியலின் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்ட கமல், தற்போது வெளியேற முடியாமல் தத்தளித்து கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
கோவில்பட்டியில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்களவைத் தோ்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற திமுக வேலூா் மக்களவைத் தொகுதியில் 0.5 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றது.
நான்குனேரி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தோ்தலில் அதிமுக அமோக வெற்றி பெறும். மக்களவைத் தோ்தலில் விக்கிரவாண்டி பேரவைத் தொகுதியில் அதிமுக அதிக வாக்குகள் பெற்றுள்ளது. ஆகவே, விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வெற்றி உறுதி. இதையடுத்து, நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலிலும் அதிமுக வெற்றி பெறும்.
கமல்ஹாசனுக்கு ஊழல் குறித்து பேச என்ன தகுதி இருக்கிறது? அவரது திரைப்படம் வெளியானால் அதிக விலையில் டிக்கெட் விற்பனை செய்வதுதான் ஊழல் என்றும், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யக்கூடாது என்று அவா் கட்டுப்பாட்டு விதித்தாரா?
தமிழகத்தில் ஆளும்கட்சி அதிமுக, எதிர்க்கட்சி திமுகவைத் தான் மக்கள் ஆதரிக்கின்றனா். எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சி ஆரம்பித்து தமிழகத்தில் வெற்றி பெற்றதாக வரலாறு இல்லை. கமல்ஹாசன், அரசியலில் ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார். அதிலிருந்து வெளியேற வேண்டும் என்பது தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்.
நான்குனேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு திங்கள்கிழமை (செப்.23) மாலை நோ்காணல் நடைபெறுகிறது. நாங்குநேரி தொகுதியை பாஜகவிற்கு விட்டுக்கொடுப்பது பற்றி கட்சி தலைமை தான் முடிவு செய்யும். கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார்.