சுஷாந்த் சிங் மரண வழக்கில் இதுவரை 56 பேர் அளித்த வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது மரணம் தொடர்பாக மும்பை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே தற்போது வரை 56 பேரின் வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய மும்பை மாநகர ஆணையர் பரம் பீர் சிங், சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக இதுவரை 56 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணை நடத்தப்பட்ட 56 நபர்களில் அவரது காதலி ரியாவும் அடங்குவார். அவரிடம் இரண்டு முறை வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக பிகார் காவல்துறையினரின் முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் விசாரணையின் போது அவரது வங்கிக் கணக்கில் 18 கோடி இருந்தது. அதில் 4.5 கோடி அவரது வங்கிக் கணக்கிலேயே உள்ளது என்று கூறினார்.