தில்லியின் ஓக்லா தொழிற்துறைப் பகுதியில் காணாமல் போன குழந்தையை தேடிக் கொண்டிருந்த நபரை அவரது கர்ப்பிணி மனைவி முன் அடித்துக் கொன்றுள்ளனர்.
ராஜஸ்தானைச் சேர்ந்த கிருஷ்ண குமார் (வயது 40) தனது மனைவி மற்றும் 7 வயது மகனுடன் தில்லி ஓக்லா தொழிற்துறைப் பகுதியில் வசித்து வருகின்றார்.
இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு அவரது மகன் காணாமல் போயுள்ளார். இதையடுத்து குமார் தனது மனைவியுடன் அப்பகுதியில் மகனைத் தேடியுள்ளார்.
அப்போது குடிபோதையில் இருந்த சகோதரர்கள் தீரஜ் அரோரா மற்றும் ராகேஷ் அரோரா ஆகிய இருவரிடமும் தனது மகனைப் பற்றுக் கேட்டுள்ளார்.
அவர்களிடம், குமார் திரும்ப திரும்பக் கேட்டதால் கோபமடைந்த அவர்கள் குமாரின் மனைவி முன் இரும்புக் கம்பியால் பலமாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த குமார் சாலையில் மயங்கி விழுந்தார்.
இதைக் கண்ட அவரது மனைவி உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்துள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் குமார் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தை அடுத்து குமாரைக் கொன்ற இருவரையும் தில்லி தென்கிழக்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.