

நாமக்கல்: கரோனா பாதிப்பு, விளைச்சல் அதிகரிப்பு, வியாபாரிகள் வருகை இல்லாதது போன்றவற்றால் கொல்லிமலை பலாப்பழங்கள் நாமக்கல், சேலம் மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரம் குவித்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
முக்கனிகளாக கருதப்படுவது மா, பலா, வாழை. தேனில் ஊறிய பலா என்று அப்பழத்தின் சுவையை உணராதவர்கள் கிடையாது. தமிழகத்தில் பண்ருட்டி மற்றும் கொல்லிமலை பலாப்பழங்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.
ஒவ்வொரு ஆண்டும் வைகாசி, ஆனி, ஆடி, மாதங்களில் பலாப்பழம் வரத்து அதிக அளவில் காணப்படும். பண்ருட்டி பலாப்பழங்களை விட கொல்லிமலை பலாவுக்கு ருசி அதிகம். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பழ வியாபாரிகள் கொல்லிமலைக்கு வந்து மொத்தமாக பலாப்பழங்களை கொள்முதல் செய்து செல்வர்.
கரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகரித்து வருவதால் பெரும்பாலான வியாபாரிகள் கொல்லிமலை வரவில்லை. மேலும் அம்மலைப்பகுதியிலும் தொற்று அதிகரித்து காணப்படுவதால் வியாபாரிகள் கொல்லிமலைக்கு வரவேண்டாம் என உள்ளாட்சித்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பலா விளைச்சல் அதிகரித்துள்ளதால் அவற்றை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். வாங்குவதற்கு வியாபாரிகள் யாரும் வராததால் அவற்றை வாடகை வாகனங்களில் மொத்தமாக எடுத்து வந்து நாமக்கல், சேலம் மாவட்டத்தின் முக்கிய சாலையோரங்களில் குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
சில்லரை வியாபாரிகளும் அவற்றை வாங்கிச் சென்று ஒரு பலாச்சுளை ரூ.2-க்கு விற்பனை செய்கின்றனர். முழு பழமாக வாங்குவது என்றால் பலாப்பழத்தின் எடையைப் பொறுத்து கிலோ ரூ.20 என விலை வைத்து விற்பனை செய்யப்படுகிறது. போதிய அளவில் பழங்கள் விற்பனை இல்லாததால் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்.
இது குறித்து கொல்லிமலை தின்னனூர்நாடு பகுதி விவசாயி நாகலிங்கம் என்று கூறியதாவது: கொல்லிமலையில் தற்போது பலாப்பழங்கள் விளைச்சல் அதிகரித்துள்ளது. அதேவேளையில் மற்ற இடங்களை போல் இங்கும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் வெளியாள்கள் யாரும் மலைப்பகுதிக்கு வருவதில்லை. கொல்லிமலை பலாப்பழங்கள் தமிழகம் மட்டுமன்றி கேரளம், கர்நாடகம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும் மொத்தமாக விற்பனைக்கு அனுப்பப்படும். ஒவ்வோர் ஆண்டும் சீசன் காலங்களில் சுமார் ரூ.5 கோடி வரை பலாப்பழங்கள் விற்பனை நடைபெறும்.
பலா மட்டுமின்றி அன்னாசி, வாழைப்பழங்கள் விற்பனையும் இக்காலகட்டத்தில் அதிகம் நடைபெறும். தற்போது கொள்முதல் செய்ய வியாபாரிகள் இல்லாததால் பழங்களை நாங்களே நேரடியாக சென்று நாமக்கல், சேலம், ஆத்தூர், தம்மம்பட்டி ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், பிற மாவட்டங்களுக்கும் எடுத்துச் சென்று நேரடியாக விற்பனை செய்து வருகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.