தஞ்சாவூர்: கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாற்றில் நீர் திறப்பு புதன்கிழமை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12-ஆம் தேதி திறந்துவிடப்பட்ட தண்ணீர் செவ்வாய்க்கிழமை பிற்பகல் எதிர்பார்க்கப்பட்ட நேரத்தைவிட கிட்டத்தட்ட 2 மணிநேரம் தாமதமாக கல்லணைக்கு வந்தடைந்தது.
நீர்வரத்து குறைவாக இருந்ததால் கல்லணையிலிருந்து பிற்பகல் 12.50 மணியளவில் காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்நிலையில், கல்லணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்துள்ளதால், புதன்கிழமை காவிரியில் விநாடிக்கு 3,015 கன அடி வீதமும், வெண்ணாற்றில் விநாடிக்கு 3,005 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரியிலும், வெண்ணாற்றிலும் நீரோட்டம் பரவலாகக் காணப்படுகிறது.
கல்லணைக் கால்வாயில் விநாடிக்கு 501 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் விநாடிக்கு 709 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.