நாகை மாவட்டம் சீர்காழி வட்டாட்சியர் அலுவலகத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளர் ஒருவர் மாவட்ட எல்லையான கொள்ளிடம் பாலத்தில் அமைந்துள்ள சோதனை சாவடியில் வெளிமாவட்டத்தில் இருந்து வரும் நபர்கள் குறித்து கண்காணிப்பு மற்றும் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு சீர்காழி அரசு கரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது. அவருக்கு கடந்த சனிக்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டது.
தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வட்டாட்சியர், தனி வட்டாட்சியர்கள், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அதிகாரிகள் என 80 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு தணிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், பரிசோதனையின் முடிவு இன்று புதன்கிழமை வெளியானது. இதில் சீர்காழி தாலுக்கா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வரும் 40 வயது பெண்ணுக்கு கரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து அவர் மயிலாடுதுறை கரோனா வார்டில் சேர்க்கப்பட்டுள்ளார். 80 பேரில் இன்னும் 15 பேருக்கு பரிசோதனை முடிவு வெளியாகவில்லை.