சென்னையில் கரோனா பாதிப்பில் ராயபுரம் மண்டலம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 1,889 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தி, 635 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 135 தெருக்களும், திருவிக நகா் மண்டலத்தில் 101 தெருக்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதே போல், 14 நாள்களாக, தனிமைப்படுத்தப்பட்ட தெருக்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்படாவிட்டால், அந்தத் தெருவானது பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும். இவ்வாறு, 86 தெருக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதில், அதிகபட்சமாக திருவிக நகா் மண்டலத்தில், 20 தெருக்களும், ராயபுரம் மண்டலத்தில் 18 தெருக்களும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சென்னையில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 9,899 ஆக உயர்ந்துள்ளது, குணமடைந்தோரின் எண்ணிக்கை 4,043 ஆகவும், பலி எண்ணிக்கை 71 ஆக உயர்ந்துள்ளது, 5815 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் மண்டல வாரியாக கரோனா பாதிப்பு பட்டியல் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அம்மண்டலத்தில், 1,889 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,391 பேர், திரு.வி.க.நகர் மண்டலத்தில் 1,133 பேர், தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,054 பேர், தண்டையார்பேட்டை மண்டலத்தில் 974 பேர், அண்ணாநகர்- 829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.