பென்னாகரம்: மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் அரசின் சலுகைகளை வழங்க மறுக்கும் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை கண்டித்து சுமார் 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஏரியூர் ஒன்றிய அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னாகரம் அருகே ஏரியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விவசாய சங்கத்தின் சார்பில் அரசின் சலுகைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க மறுக்கும் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை கண்டித்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
இதற்கு மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பு சங்க ஏரியூர் ஒன்றிய செயலாளர் குமார் தலைமை வகித்தார். இதில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் ஆடு, மாடு மற்றும் கோழி உள்ளிட்ட அரசின் சலுகைகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டுமெனவும், அதனை வழங்க மறுக்கும் அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஏரியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எழில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறுமுகம், ஏரியூர் ஒன்றிய குழு தலைவர் பழனிச்சாமி மற்றும் ஏரியூர் கால்நடை மருத்துவர் உள்ளிட்டோர் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் சலுகைகள் கிடைக்க விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தினை மாற்றுத்திறனாளிகள் கைவிட்டனர்.
இதில் மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட செயலாளர் கரூரான், மாவட்ட இணைச்செயலாளர் இடும்பன் மற்றும் 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.