புதுச்சேரி: அரியாங்குப்பம் பகுதியில் வீட்டில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசு வெடித்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர், மேலும் இரு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தது.
புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பம் பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசுகள் தயாரிக்கும் தொழில்நிறுவனங்கள் உள்ளன. இப்பகுதியில் புதுக்குளம் அந்தோணியார் வீதியை சேர்ந்தவர் நெப்போலியன் (வயது 44). இவர் இப்பட்டாசுகளை விற்பனைக்காக தனது வீட்டுக்கு அருகேயுள்ள லசாத்ராஜ் வீட்டை வாங்கி அங்கு வைத்துள்ளார். மேலும் பட்டாசுகளையும் தயாரித்துள்ளார்.
தீபாவளி வரவுள்ளதால் ஏராளமான பட்டாசுகள் இருந்துள்ளன. திடீரென்று பட்டாசு வெடித்து, அவ்வீட்டின் சுவர்கள் விழுந்து நெப்போலியன் வீடு முற்றிலும் தரைமட்டமானது.
இதையடுத்து அப்பகுதியில் மின்இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இச்சம்பவத்தையடுத்து தரைமட்டமான வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நெப்போலியன், அவரது மனைவி பத்மாவதியை (40), தீயணைப்புத்துறையினர், அப்பகுதி மக்கள், அரியாங்குப்பம் காவல்துறையினர் மீட்டு அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் நெப்போலியன், அவரது மனைவி பத்மாவதி இருவரும் உயிரிழந்தனர்.
இச்சூழலில் நெப்போலியன்-பத்மா தம்பதியின் மகள்கள் இருவரும் அதில் சிக்கியிருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதையடுத்து அவர்களின் இரு மகளையும் தேடினர். ஆனால் அங்கு யாரும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் சம்பவம் நடந்தபோது மூத்தமகள் செல்சியா (17) கடைக்கு சென்றதாலும், இரண்டாவது மகள் அன்னாள் (15) வீட்டின் வெளியே இருந்ததாலும் இருவரும் உயிர் தப்பியதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.