இந்தியாவில் வெள்ள பாதிப்பு பகுதிகள் குறித்து உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி கூகுளில் வெள்ள பாதிப்பு குறித்த கேள்விகளை உள்ளீடு செய்தால், அப்பகுதி குறித்த உடனடி தகவல்களை வழங்குகிறது.
கூகுள் நிறுவனம் ஏற்கனவே வெள்ள பாதிப்பு இடங்கள் குறித்த எச்சரிக்கையை வழங்கி வருகிறது. இதனிடையே இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மாநிலங்கள் தொடர் மழை காரணமாக வெள்ள பாதிப்புகளை சந்தித்து வருவதால், அண்மை தகவல்கள் குறித்து உடனடியாக அறிந்துகொள்ளும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக நீர்நிலைப் பகுதிகளுக்கு அருகில் உள்ள இடங்கள் குறித்தும், நீர் மட்டம் குறித்தும், மழை அளவு குறித்தும் அறிந்துகொள்ள இயலும்.
பருவமழை காரணமாக அசாம், பிகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதற்காக கடந்த சில மாதங்களாக மத்திய நீர்வள ஆணையத்துடன் வெள்ள பாதிப்பை முன்கூட்டியே அறிவிக்கும் தங்கள் குழு இணைந்து வெள்ள பாதிப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் உள்ள நபர் ஸ்மார்போன் வைத்திருந்தால், வெள்ள பாதிப்பு குறித்த எச்சரிக்கை விடுக்கப்படும் என கூகுள் அறிவித்துள்ளது. இதனை ஆங்கிலம், ஹிந்தி, பெங்காலி உள்ளிட்ட மொழிகளில் வழங்குகிறது. மேலும் வெள்ள பாதிப்பு பகுதிகளின் வரைபடங்களையும் உடன் வழங்கும் வசதியை கூகுள் ஏற்படுத்தியுள்ளது.