

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைக்குளத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் அணைக்கரை முத்து(வயது 72). விவசாயியான இவர் தோட்டத்தில் காய்கறி பயிரிட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் தோட்டத்தைச் சுற்றிலும் மின் வேலி அமைத்திருந்ததாக வந்தத் தகவலையடுத்து கடையம் வனத்துறையினர் புதன்கிழமை இரவு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இந்நிலையில் அணைக்கரை முத்துவிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்தார்.
தகவலறிந்த உறவினர்கள் வனத்துறையினர் தாக்கியதில் அணைக்கரை முத்து இறந்ததாகக் கூறி வியாழக்கிழமை ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் குற்றவியல் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைத்ததையடுத்து குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன் விசாரணையில் ஈடுபட்டார்.
மேலும், சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், நிவாரணமாக 50 லட்சம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்று கூறி இன்று மூன்றாவது நாளாக உடலை வாங்க மறுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சிவசைலம், பங்களாக்குடியிருப்பில் உள்ள கடையம் வனச்சரகர் அலுவலகத்தில் குற்றவியல் நீதிபதி கார்த்திகேயன் விசாரணையை மேற்கொண்டுள்ளார். வனத்துறையினர், மின்வாரிய ஊழியர்கள், அணைக்கரை முத்து உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
வாகைக்குளம், சிவசைலம் பகுதியில் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.