தஞ்சாவூர்: தஞ்சாவூரில் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக புதன்கிழமை காலை சிலரை பிடிக்கச் சென்ற காவலர் அரிவாளால் வெட்டப்பட்டார்.
தஞ்சாவூர் புறவழிச்சாலையில் வண்ணாரப்பேட்டை பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாய் பாலத்தில் மருத்துவத் தம்பதிகளான மணிமாறன் - சுதா ஞாயிற்றுக்கிழமை இரவு காற்றுக்காக நின்று கொண்டிருந்தனர். அப்போது இவர்களை அங்கு வந்த 3 பேர் கத்தியைக் காட்டி மிரட்டியும், பீர் பாட்டிலால் தாக்கியும் 11 பவுன் நகைகளையும், ரூ.1.25 லட்சம் ரொக்கத்தையும் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து வல்லம் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக மருத்துவக் கல்லூரி அருகேயுள்ள மானோஜிபட்டியில் சிலரை பிடிப்பதற்காகத் தனிப்படைக் காவலர்கள் புதன்கிழமை காலை சென்றனர்.
அப்பகுதியில் இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், கொங்கணாபாளையத்தைச் சேர்ந்த செல்வத்தை (48) பிடித்து விட்டு, மற்றொருவரைப் பிடிக்க முயன்றனர். அப்போது அந்த நபர், காவலர் கௌதமனின் (32) காலில் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார். இதில் காயமடைந்த கௌதமன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், தப்பியோடிய நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.