மதுரையில் தேவைப்படும் பட்சத்தில் முழு ஊரடங்கு உத்தரவு குறித்து முதல்வரே அறிவிப்பார் என்று வருவாய்த் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு தானியங்கி, கை சுத்திகரிப்பான் கருவியை வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பங்கேற்று கை சுத்திகரிப்பான் கருவியில் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு வழங்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியாதாவது: அனைத்து அரசு அலுவலகங்களிலும் சோப்பு போட்டு கைகழுவ வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது, அவ்வாறு செயல்படுத்த முடியாத அலுவலகங்களில் கை சுத்திகரிப்பு கருவியை பொருத்துவதற்காக தற்போது முயற்சி எடுத்துள்ளோம், மாநகர எல்லையில் இருக்கும் 27 காவல் நிலையங்களுக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது புறநகர் காவல் துறைக்கு அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக 50 காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,
மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று நிலைமை தினந்தோறும் கண்காணிக்கப் பட்டு வருகிறது. நோய் தொற்று அதிகரிப்பு குறித்து முதல்வர் தொடர்ந்து கேட்டு வருகிறார். நிலைமைக்கு ஏற்றவாறு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து முதல்வர் அறிவிப்பார். எந்த அறிவிப்பாக இருந்தாலும் முன் கூட்டியே அறிவிக்கப்படும் என்றார் அமைச்சர் ஆர்.பி உதயகுமார்.