புதுதில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் புதிதாக 5,611 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டில் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை புதன்கிழமை 1,06,750 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் பலியாகியுள்ளனர். நாட்டில் இதுவரை 3,303 பேர் பலியாகியுள்ளனர், தொற்று பாதிக்கு 61,149 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 42,298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கரோனா தொற்று பாதிப்பில் மகாராஷ்டிரம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு இதுவரை 37,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் 12,448 பேர், குஜராத்தில் 12,140 பேர், தலைநகர் தில்லியில் 10,554 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.