நாகப்பட்டினம்: கோரிக்கையை வலியுறுத்தி நாகை, நம்பியார் நகர் மீனவர்கள் நாகையில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 1983-இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, கரையிலிருந்து 5 கடல் மைகளுக்குள்பட்ட தொலைவில் விசைப் படகுகளைக் கொண்டு மீன்பிடித் தொழில் செய்யக் கூடாது, 40 மி.மீட்டருக்குக் குறைவான கண்ணியளவு கொண்ட மீன்பிடி இழுவலைகளைப் பயன்படுத்தக் கூடாது, அதிவேக திறன் கொண்ட இயந்திரங்கள் மற்றும் அதிக நீளமுள்ள படகுகளை பயன்படுத்தக் கூடாது என்பன உள்ளிட்ட அனைத்து நெறிமுறைகளையும் அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
நம்பியார் நகர் சமுதாயக் கூடம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நம்பியார் நகர் மீனவக் கிராமத்தைச் சேர்ந்த திரளான மீனவர்கள், மீனவப் பெண்கள் பங்கேற்றனர்.
சுருக்குமடி வலைகள் பயன்பாட்டுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிற மீன்பிடிப்பு நடவடிக்கைகளுக்கும் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்தப் போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தையொட்டி, நம்பியார் நகர் மீனவர்கள் சனிக்கிழமை மீன்பிடிப்புக்குச் செல்வதைத் தவிர்த்து, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.