பாலியல் சர்சையில் சிக்கிய சிவசங்கர் பாபாவின் சுஷில்ஹரி பள்ளியை மூட மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே டேராடூனில் சிகிச்சை பெற்று வந்த சிவசங்கர் பாபா இன்று காலை தப்பிச் சென்ற நிலையில், தில்லி காவல்துறை உதவியுடன் மதியம் கைது செய்யப்பட்டார்.
இதற்கிடையே, சுஷில்ஹரி பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித்துறைக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுமம் பரிந்துரைத்துள்ளது.
மேலும் பள்ளியைவிட்டு வெளியேறும் மாணவர்களுக்கு வேறு பள்ளியில் சேர உரிய ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும், சுஷில்ஹரி பள்ளியை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.