பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவை செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.
சென்னை சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். அதனடிப்படையில் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் நேரடியாக விசாரணை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவசங்கர் பாபா உள்ளிட்ட சிலர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதனிடையே டேராடூனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவசங்கர் பாபாவை விசாரிக்க சென்னை சிபிசிஐடி தனிப்படையினர் விரைந்த நிலையில் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து தப்பி தில்லி வந்து காசியாபாத் பகுதியில் பதுங்கியிருந்த சிவசங்கர் பாபாவை கைது செய்த காவல்துறையினர் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தனர்.
சென்னை எழும்பூர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்ட சிபிசிஐடி காவல்துறையினர், மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தற்போது செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.