

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் உண்டு உறைவிடப் பள்ளி நிறுவனர் மீது மாணவியர் சிலர் பாலியல் புகார் அளித்தது தொடர்பான வழக்கில் ஜூலை 1 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க வியாழக்கிழமை நீதிபதி உத்தரவிட்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உண்டு உறைவிடப்பள்ளியை தொடங்கி நடத்தி வந்தவர் சிவசங்கர். இவர் சிலரால் சிவசங்கர் பாபா என்று அழைக்கப்பட்டார்.
இவர் மீது அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவியர் சிலர் பாலியல் தொல்லை அளித்ததாக அண்மையில் குற்றம் சாட்டியிருந்தனர். இப்புகாரின் பேரில் அவருக்கு சொந்தமான அப்பள்ளியில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தினரும், காவல்துறையினரும் சோதனை நடத்தினார்கள்.
அப்போது சிவசங்கர் பாபா நெஞ்சுவலியால் அவதிப்பட்ட நிலையில் டேராடூன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. அப்பள்ளியின் நிர்வாகிகள் சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலமும் பெறப்பட்டது.
சிவசங்கர் பாபா மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மீது கேளம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கினை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதியும் உத்தரவிட்டார். இந்நிலையில் தில்லியில் சி.பி.சி.ஐ.டி. காவலர்கள் சிவசங்கர் பாபாவை கைது செய்து அவரை சென்னைக்கு விமானத்தில் அழைத்து வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடல் பரிசோதனையும் செய்தனர்.
பின்னர் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்பு ஆஜர்படுத்தினார்கள். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அவர் சிவசங்கர் பாபாவை வரும் ஜூலை 1 ஆம் தேதி வரை செங்கல்பட்டு மாவட்ட சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.