வங்கக்கடலில் புயல் உருவாகவுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
நாளை வங்கக்கடலில் உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, மே 24ஆம் தேதி புயலாக மாறி ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே மே 26ஆம் தேதி கரையைக் கடக்கவுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், வங்கக்கடல் கரையோர உள்ள மாநிலங்களான தமிழகம், ஆந்திரம், ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதிக்கப்படும் மாவட்டங்களில் உள்ள கரோனா மையங்களுக்கு தேவையான மருந்துகள், ஆக்ஸிஜன் உள்ளிட்டவை தொடர்ந்து கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆக்ஸிஜன் டேங்கர்களை விமானப்படை விமானங்கள் மற்றும் ரயில்கள் மூலம் உரிய இடங்களுக்கு விரைவாக கொண்டு செல்ல வேண்டும்.
மேலும், தொடர் மழை பெய்தால் நீர் தொடர்பான நோய்கள் வேகமாக பரவ வாய்ப்புள்ளதால் உச்சகட்ட கவனத்துடன் செயல்பட வேண்டும்.
தொடர்ந்து, வானிலை ஆய்வு மையத்தில் அறிவிப்புகளை பின்பற்றி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.