கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து கம்பமெட்டுக்கு 11 மாதங்களுக்கு பிறகு வெள்ளிக்கிழமை முதல் பேருந்து இயக்கப்பட்டது.
கரோனா தொற்று பரவல் பொதுமுடக்கம் காரணமாக தமிழக கேரள போக்குவரத்து முடக்கப்பட்டது. பின்னர் கம்பம் குமுளி பேருந்து போக்குவரத்து ஜன. 6-இல் தொடங்கப்பட்டது. இதற்கிடையே கம்பம் கம்பமெட்டுக்கு போக்குவரத்து இயக்கப்படாமல் இருந்து வந்தது. வெள்ளிக்கிழமை முதல் கம்பத்திலிருந்து கம்பமெட்டுக்கு தமிழக எல்லை வரை காலை மற்றும் மாலை என நான்கு முறை இயக்க அனுமதிக்கப்பட்டது. எல்லைப்பகுதி வரை என்பதால் கம்பமெட்டு பேருந்தில் எதிர்பார்த்த அளவு பயணிகள் செல்லவில்லை.
இதுகுறித்து அய்யப்பன் என்பவர் கூறும் போது, கம்பத்திலிருந்து கேரளாவுக்குள் பேருந்து போக்குவரத்து சென்று வந்தால்தான் எதிர்பார்த்த கூட்டம் சேரும், குமுளி மற்றும் கம்பமெட்டு தமிழக எல்லை வரை இயக்கினால், எதிர்பார்க்கின்ற பயணிகள் வரமாட்டார்கள் என்றார்.