கிரிக்கெட் வீரர் சச்சின் உள்ளிட்ட பிரபலங்கள் வெளியிட்ட டிவிட்டர் செய்தி குறித்து விசாரிக்க மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதன் வரிசையில், சர்வதேச பாப் நட்சத்திரம் ரிஹானா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் ஆதரவு தெரிவித்து டிவீட் வெளியிட்டனர்.
அவர்களின் டிவிட்டர் செய்தி வெளியானவுடன் கிரிக்கெட் வீரர் சச்சின், உள்நாட்டு விவகாரத்தில் வெளிநாட்டினர் பங்குபெற தேவையில்லை என டிவீட் செய்தார். அதன்பின் வரிசையாக பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என பலர் ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கும் வகையில் டிவிட்டர் செய்தி வெளியிட்டனர்.
இந்நிலையில் பிரபலங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் மத்திய அரசிற்கு ஆதரவாக டிவீட் வெளியிட்டுள்ளதால் அவர்கள் ஏதேனும் அழுத்தத்தினால் இந்த டிவிட்டர் செய்தியை வெளியிட்டார்களா என்று விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் கூறுகைய்ல்,
மகாராஷ்டிர காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் மற்றும் பிற தலைவர்கள் புகார் அளித்ததை அடுத்து, மத்திய பாஜக தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவாக பிரபலங்கள் டிவீட் செய்யக்கோரி எந்தவிதமான அழுத்தத்திற்கும் உள்ளார்களா என்பதை அறியவே புலனாய்வுத்துறையின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த டிவீட்கள் அனைத்தும் குறிப்பிட்ட ஒருசில மணிநேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அக்ஷய் குமார் மற்றும் சைனா நேவால் ஆகியோரின் டிவீட்கள் ஒரே மாதிரியாகவும் இருக்கின்றது.
சில டிவீட்களில் ஒரு வார்த்தை கூட மாறாமல் உள்ளது என்று தெரிவித்தார்.