சென்னை கண்ணகிநகரில் பட்டா கத்தியினால் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னையில் முகநூல் (ஃபேஸ்புக்), கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்), சுட்டுரை (ட்விட்டர்) உள்ளிட்ட சமூக ஊடகங்களில் சில இளைஞர்கள் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் காட்சி கடந்த இரு நாள்களாக வேகமாக பரவியது. இதைப் பார்த்த காவல்துறை உயர் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் அவர்கள், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டனர். உத்தரவின்பேரில் காவல்துறை விசாரணை செய்தனர். விசாரணையில், அந்த சம்பவம் கடந்த 6-ஆம் தேதி கண்ணகிநகரில் நடைபெற்றது என்பது தெரியவந்தது.
இதையடுத்து கண்ணகிநகர் காவல்துறை, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனர். விசாரணையில், கடந்த 6-ஆம் தேதி இரவு கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றதும், அப்போது சுனிலும், அவரது நண்பர்களும் கண்ணகிநகரில் பிரதான சாலை ஒன்றில் மொபெட்டின் மீது கேக்கை வைத்து பட்டாக் கத்தியால் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து காவல்துறை, கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த சுனில், அவரது நண்பர்களான அதேப் பகுதியைச் சேர்ந்த நவீன்குமார், அப்பு, தினேஷ், ராஜேஷ், கார்த்திக் ஆகிய 6 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக காவல்துறை, மேலும் பலரை தேடி வருகின்றனர்.