கம்பம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு மோதும் 3 பெண்கள்

தேனி மாவட்டம் கம்பம் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் உள்ள 33 இடங்களில் திமுக 24 இடங்களையும், அதன் கூட்டணி 2 இடங்களிலும் என மொத்தம் 26 இடங்களை பிடித்து முன்னிலையில் உள்ளது.
கம்பம் நகராட்சி
கம்பம் நகராட்சி

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் மொத்தம் உள்ள 33 இடங்களில் திமுக 24 இடங்களையும், அதன் கூட்டணி 2 இடங்களிலும் என மொத்தம் 26 இடங்களை பிடித்து முன்னிலையில் உள்ளது.

தேனி மாவட்டம் கம்பம் நகர்மன்ற தலைவர் பெண், பொது என பிரிக்கப்பட்டுள்ளது.

கம்பம் நகரை பொறுத்த வரை திமுக வடக்கு, தெற்கு என்று பிரிக்கப்பட்டு வடக்கு நகர செயலாளர் வக்கீல் துரை நெப்போலியன் மனைவி வனிதா 3 ஆவது வார்டிலும், தெற்கு நகர செயலாளரான செல்வக்குமார் மனைவி சுனோதா 18 ஆவது வார்டிலும் போட்டியிடுகின்றனர்.

திமுக தலைமையின் விதிப்படி நகரச் செயலாளர் பதவியில், உள்ளவர் உறுப்பினர் பதவியில் வெற்றி பெற்றால், அவர்தான் நகர்மன்றத் தலைவர். ஆனால் 2 நகரச்  செயலாளர்கள் மனைவிகளும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்செல்வனின் தீவிர ஆதரவாளர் சி.வீரபாண்டியன் மனைவி சுந்தரியும், 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

3 பலமான திமுக நிர்வாகிகள் மனைவியர்கள் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு களத்தில் உள்ளனர், இதனால் நகர்மன்றத் தலைவர் பதவி யாருக்கு என்று திமுக தொண்டர்களிடையே குழப்ப நிலை உள்ளது.


நகர்மன்றத் தலைவர் பதவி யாருக்கு

கம்பம் நகர வடக்கு திமுகவை பொறுத்தவரையில் ஒதுக்கப்பட்ட வார்டுகளில் 19-ல் 17 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

தெற்கு நகர திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட 14 வார்டுகளில், 9 வார்டுகள் திமுகவும், 5 வார்டுகள் அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது.

இதை ஆய்வு செய்ததில் வடக்கு நகர திமுக செயலாளர் மனைவி வனிதா நெப்போலியனுக்கு நகர்மன்றத் தலைவர் பதவிக்கு அதிக வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. மேலும் நெப்போலியன் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தவர்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் தெற்கு நகர செயலாளர் செல்வக்குமார் மனைவி சுனோதா, இருவரும் புதுமுகங்கள், ஆனால் கட்சியினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள். இவர்களுக்கு வாய்ப்பு 2 ஆவது இடத்தில் உள்ளது.

வீரபாண்டியன் மனைவி சுந்தரிக்கு வாய்ப்பு என்பது, ஒரு காலகட்டத்தில் பிரகாசமாக இருந்தது, அதேபோல் திமுக மூத்த தலைமை நிர்வாகி ஆதரவும் உள்ளது, நகர்மன்றத்  தலைவர் பதவிக்கு கட்சியின் கட்டளையை ஏற்கும் நிலையில் உள்ளார்.

தலைமையின் அறிவிப்பு

கம்பம் நகர்மன்றத் தலைவர் பதவிக்கு களத்தில் மூன்று பேர் உள்ள நிலையில் திமுக தலைமையின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தங்களுக்கு ஆதரவு திரட்ட வேண்டும் என்பதற்காக வெற்றி பெற்ற கவுன்சிலர்களை விலைக்கு வாங்காமல், அந்த தொகையை கட்சித் தலைமைக்கு செலுத்துமாறும், நகர்மன்ற தலைவர் பதவி யாருக்கென்று அறிவாலயம் தீர்மானிக்கும் என்று அறிவிப்பு வந்ததாக திமுகவினர் சிலர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com