புதுச்சேரி: புதுவை அரசைக் கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

புதுவையில் புதன்கிழமை காலை தொடங்கிய புதுச்சேரி பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏக்கள், புதுவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா, மின்துறை தனியார்மயம் உள்ளிட்ட பிரச்னைகள்
புதுச்சேரி: புதுவை அரசைக் கண்டித்து திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு

புதுவையில் புதன்கிழமை காலை தொடங்கிய புதுச்சேரி பேரவைக் கூட்டத்தில் பங்கேற்ற திமுக எம்எல்ஏக்கள், புதுவையில் நீட் தேர்வு விலக்கு மசோதா, மின்துறை தனியார்மயம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதம் நடத்துவதற்கு, பேரவையை 7 நாட்கள் நடத்த வேண்டுமென வலியுறுத்தி எதிர்கட்சித் தலைவர் இரா.சிவா தலைமையில், திமுக உறுப்பினர்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத், நாக தியாகராஜன் உள்ளிட்டோர் சட்டப்பேரவைத் தலைவரை நோக்கி, குரலெழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, செயல்படாத புதுவை அரசை கண்டித்தும், சட்டப்பேரவை கூட்டத்தை ஒரு வார காலம் நடத்த அனுமதிக்காததால், திமுக எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி வெளிநடப்பு செய்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசு பதவியேற்று 8 மாதங்கள் ஆகியும் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றவில்லை. மழை நிவாரணம், விவசாயிகளுக்கு நிவாரணம், தீபாவளி, பொங்கல் பரிசு பொருட்கள், தற்கால ஊழியர்களுக்கான பத்தாயிரம் சம்பளம் உயர்வு உள்ளிட்ட எதையும் செயல்படுத்தாமல் முடங்கியுள்ளது.

பிரதமர் குறிப்பிட்ட பெஸ்ட் புதுச்சேரி திட்டத்தை நிறைவேற்றவில்லை. புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை சொன்னதையும் இந்த அரசு நிறைவேற்றவில்லை. மூடப்பட்ட அரசு சார்பு நிறுவனங்கள் திறக்கப்படவில்லை. மின் துறை தனியார்மயம் குறித்து வெளிப்படையான தகவல் இல்லை. அனைத்து விதத்திலும், இந்த அரசு செயல்படாத அரசாக உள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையிலான எம்எல்ஏக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

இந்த நிலையில், சட்டப்பேரவைக் கூட்டம் இரங்கல் குறிப்புடன், விவாதங்கள் ஏதுமின்றி 20 நிமிடங்களில் முடிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com