
புதுக்கோட்டை: அறந்தாங்கி நகர்மன்றத் தலைவராக திமுகவைச் சேர்ந்த இரா. ஆனந்த் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.
அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் அறந்தாங்கி நகர்மன்றக் கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
பெரும்பான்மை இடங்களைப் பெற்றுள்ள திமுக சார்பில், 8ஆவது வார்டில் வெற்றி பெற்ற உறுப்பினர் இரா.ஆனந்த். தனது வேட்புனுவை நகராட்சி ஆணையர் லீமா சைமனிடம் தாக்கல் செய்தார்.
அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்துக்கு வரவில்லை. தலைவர் பதவிக்கு வேறு யாரும் வேட்புமனு அளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து இரா.ஆனந்த் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டதாக ஆணையர் அறிவித்தார். அவரை திமுக உறுப்பினர்கள், தலைவர் இருக்கையில் அமர வைத்தனர்.
தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரா.ஆனந்த் (48), அறந்தாங்கி நகர திமுக செயலராக உள்ளார். இவர் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர். சிறுவயது முதல் திமுக உறுப்பினர், கிளைச் செயலர் பொறுப்புகளை வகித்து வந்தவர். 2008 முதல் அறந்தாங்கி நகரச் செயலராக இருந்து வருகிறார். மனைவி நித்யா, மகன்கள் வசிஷ்ட்டன், வர்ஷா, மகள் ஷாஷனி ஆகியோர் உள்ளனர்.
திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் உதயம் சண்முகம், மணமேல்குடி ஒன்றியக் குழுத் தலைவர் பரணி கார்த்திகேயன் உள்ளிட்டோரும் புதிய தலைவர் ஆனந்துக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.