மகளைக் கேலி செய்தவர்கள் மீது புகார் செய்த திமுக கிளை செயலர் படுகொலை
By DIN | Published On : 25th February 2022 02:44 PM | Last Updated : 25th February 2022 02:44 PM | அ+அ அ- |

தூத்துக்குடி அருகே மகளை கேலி செய்தவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்த திமுக கிளை செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
தூத்துக்குடி பாலதண்டாயுதபுரத்தை சேர்ந்தவர் கண்ணன் . இவர் பாலதண்டாயுதபுரம் திமுக கிளை செயலாளராக உள்ளார். தாளமுத்து நகர் மெயின் சாலையில் தெயலகம் நடத்தி வந்தார். இவரது மகள் வழக்கம்போல் பள்ளி முடிந்து நேற்று மாலை ஆட்டோவில் வந்துள்ளார்.
அப்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கையசைத்து மாணவியை கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. ஆட்டோ டிரைவர் அங்கிருந்து ஆட்டோவை விரட்டி சென்று மாணவியை பத்திரமாக வீட்டில் இறக்கி விட்டு வரும் வழியில் ஆட்டோ டிரைவர் மணிகண்டன் அந்த மர்ம இளைஞர்களிடம் ஏன் தனது ஆட்டோவில் வந்த மாணவியை கிண்டல் செய்தீர்கள் என கேட்டதும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து மாணவியின் தந்தை கண்ணன் ஆட்டோ, டிரைவர் மணிகண்டன் மற்றும் உறவினர்கள் நேற்று இரவு தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் கண்ணன் தாளமுத்து நகரில் உள்ள டெய்லர் கடையை அடைத்து விட்டு வருவதாகக் கூறிச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த அந்த இளைஞர்கள் மூன்று பேர் என் மீது எப்படி நீ காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என தெரிவித்து அவரை சராமரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
தகவல் அறிந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தாளமுத்து நகர் மெயின் சாலையில் உள்ள கடைகளை அடைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு வேலை மற்றும் நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் தூத்துக்குடி நகர காவல் உதவி கண்காணிப்பாளர் கணேஷ் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.