தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் மதுபானக் கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டதில் மோசடி நடந்துள்ளதாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த விசாரணையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி சிபிஐ அவரை கைது செய்தது.
பின்னர் சிசோடியாவை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க தில்லி ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில் அவரை திஹார் சிறையில் வைத்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதனிடையே அமலாக்கத்துறையும் அவரை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது.
சிசோடியாவின் காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் 27 வரை சிபிஐ காவலும் ஏப்ரல் 29 வரை அமலாக்கத்துறை காவலும் நீட்டித்து தில்லி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.