கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் 5வது நாளாக காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் பேரூர் அருகேவுள்ள நாதேகவுண்டன்புதூரில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 11-ஆம் தேதி காட்டுத் தீ ஏற்பட்டது.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் உடுமலை, பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த வனப் பணியாளர்கள், மதுக்கரை, போளுவாம்பட்டி, கோவை வனச்சரக பணியாளர்கள் என மொத்தம் 150 பேர் ஈடுபட்டுள்ளனர்.
தரைப்பகுதியில் உள்ள புற்கள், காய்ந்த சருகுகள் மற்றும் மூங்கில்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இதனால் மரங்களுக்கு பெரிதும் சேதமில்லை என்றாலும், 5வது நாளாக காட்டுத் தீ பரவி வருகிறது.
தற்போது ஹெலிகாப்டர் மூலம் தண்ணீர் தெளித்து தீயை கட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகம் மூலம் விமானப்படைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு ஹெலிகாப்டர் கொண்டுவரப்பட்டுள்ளது.