தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்காலம் தொடங்கியது. இதனையொட்டி, சாம்பல் புதன் சிறப்புத் திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் கிறிஸ்தவா்கள் 40 நாள்கள் தவக்கால திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனா்.
இந்த தவக்காலம் தொடக்க நிகழ்வாக சாம்பல் புதன் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இருந்து இயேசு சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி வரை 40 நாள்கள் கிறிஸ்தவர்கள் நோன்பு இருப்பது, உள்ளிட்ட பல்வேறு நேர்த்திகடன்களை செய்வது உள்ளிட்ட காரியங்களில் ஈடுபடுவர்.
இந்த சாம்பல் புதனை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த பூண்டி மாதா பேராலயத்தில் புதன்கிழமை நடைபெற்ற சாம்பல் புதன் நிகழ்ச்சியில், அருள் தந்தையர்கள் சாம்சன் , ரூபன் அந்தோணி ராஜ், ஆல்பர்ட் சேவியர், தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னா் பங்குத்தந்தையா்கள், இறைமக்கள் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது.
தவக்கால நாள்களில் வெள்ளிக்கிழமை தோறும் மாலையில் சிலுவைப் பாதை, நடைபெறும்.