![தில்லியில் தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் உரிமையாளர் கைது!](http://media.assettype.com/dinamani%2F2024-02%2F5ce65f05-f5e7-46bd-9ff6-192b21941505%2F202401303112521.jpg?rect=4%2C0%2C295%2C166&w=480&auto=format%2Ccompress&fit=max)
தில்லியில் தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தில்லியில் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் ஏழு பிறந்த குழந்தைகள் இறந்த விவகாரத்தில் பணியில் இருந்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த மருத்துவமனையின் உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிழக்கு தில்லியின் விவேக் விஹார் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சனிக்கிழமை (மே 25) இரவு 11:30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டு அருகிலுள்ள இரண்டு கட்டடங்களுக்கும் பரவியதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி அதுல் கார்க் தெரிவித்தார். இந்த விபத்திலிருந்து 12 குழந்தைகள் மீட்கப்பட்டதில் ஏழு குழந்தைகள் இறந்துவிட்டனர். விபத்து ஏற்பட்டவுடன் டாக்டர் நவீன் கிச்சி தப்பியோடியதாகவும் தகவல் வெளியானது.
இந்த தகவலைத் தொடர்ந்து, 9 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, கட்டடம் தீப்பிடித்து எரிந்திருந்தது. தீயணைப்பு வீரர்களும் காவல்துறையினரும் கட்டடத்திலிருந்து 12 குழந்தைகளை மீட்டு கிழக்கு தில்லியில் உள்ள வேறொரு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீயைக் கட்டுப்படுத்த சுமார் 70 நிமிடங்கள் பிடித்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், ”குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து இதயத்தை உடைக்கிறது; அலட்சியமாக செயல்பட்டவர்கள் தப்பிக்க முடியாது. அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். விவேக் விஹாரில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகளை இழந்தவர்களுடன் அரசாங்கம் நிற்கிறது; காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் சௌரப் பரத்வாஜ், ”அலட்சியத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்” என்றார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இரங்கல் தெரிவித்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ”துயரமடைந்த பெற்றோருக்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, "தில்லி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து மனதுக்கு மிகுந்த வலியைக் கொடுத்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் எனது எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.