சென்னை வளசரவாக்கத்தில் கணவர், மனைவி படுக்கை அறையில் ரகசிய கேமிரா வைத்திருந்த திருமண தகவல் மைய உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
குரோம்பேட்டையைச் சேர்ந்தவர் சிவபாலன் கதிரேசன் (49). இவர் வளசரவாக்கத்தில் திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். இங்கு, தஞ்சாவூரைச் சேர்ந்த பன்னீர்செல்வம், அவரது மனைவி மோகனப்பிரியா இருவரும் தங்கியிருந்து பணிபுரிந்து வந்தனர். இவர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்காமல் கதிரேசன் இழுத்தடித்து வந்தாராம்.
இந்நிலையில் அண்மையில் இருவரும் ஊதியம் கேட்டபோது, கதிரேசன் அவர்களது படுக்கை அறையில் ரகசிய கேமிரா பொருத்தியிருப்பதாகவும், அதில் இருவரின் அந்தரங்க காட்சிகள் இருப்பதாகவும், ஊதியம் கேட்டால் அதை இணையதளத்தில் வெளியிடுவேன் எனவும் மிரட்டினாராம்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மோகனப்பிரியா, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில், படுக்கை அறையில் ரகசிய கேமரா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கதிரேசன் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.