ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் புதுவகை இட்லி தயாரித்து அசத்தி வருகிறார் உணவு விடுதிகளுக்கு மொத்த விலையில் இட்லி சப்ளை செய்யும் வியாபாரி ஒருவர்.
ராசிபுரம் நகரில் இட்லி உற்பத்தி செய்து நகரில் உள்ள கடைகளுக்கு மொத்த விலையில் விற்பனை செய்து வருபவர் கோபால்(42). ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இட்லி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் இவர், தற்போது கொள்ளு இட்லி தயாரித்து நகரில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த கொள்ளு இட்லி சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது என்பதால் இதனை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூறும் அவர், தற்போது இது மக்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.
சாதரணமாக வழக்கமான இட்லி ஒன்றுக்கு ரூ.5 என கடைகளுக்கு சப்ளை செய்யும் நிலையில், கொள்ளு இட்லி ரூ.8-க்கு மொத்த விலையில் விற்பனை செய்கிறார்.
மேலும் மக்கள் பொதுவாக உடல்நலனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் சூழ்நிலையில், மேலும் கேரட் இட்லி, இளநீர் இட்லி, கோதுமை இட்லி, ராகி இட்லி, கம்பு இட்லி என புதுவகை இட்லி அறிமுகம் செய்யவுள்ளதாவும் கோபால் குறிப்பிட்டார். எதிலும் புதுமைக்கு வரவேற்பு இருக்கும் என்பதற்கு உதாரணமாக இவர் தயாரித்துள்ள கொள்ளு இட்லி மக்களிடம் வரவேற்பினைப் பெற்றுள்ளது.