மாநில மொழிக் குழு அறிவித்தபடி, பிப்ரவரி 4 ஆம் தேதி மாகாணம் தழுவிய வேலைநிறுத்தம் தொடங்கியது. டாக்கா பல்கலைக் கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எழுச்சியாகக்கூடினர், காலை 11 மணிக்கு காசியுல் ஹக் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது. காசி குலாம் மஹ்பூப், டாக்கா பல்கலைக்கழக மாநில மொழிக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் மதீன் ஆகியோர் உணர்ச்சிபொங்க உரையாற்றினர். மாணவர்கள் பெருந்திரளாகி ஆர்ப்பாட்டத்தை நடத்தக் கிளம்பினர். பல்கலைக்கழக துணைவேந்தர், பிரதமரின் வீடுகள் வழியாக நகரத் தெருக்களில் மாணவர் பேரணி பெரும்படைபோல அணிவகுத்துச் சென்றது. வேலைநிறுத்தத்தைத் தடுக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் தோற்றன. டாக்கா மற்றும் மாகாணத்தின் அனைத்து பகுதிகளிலும் (மைமன்சிங், சிட்டகாங், கொமில்லா, மாணிக்கஞ்ச், தினாஜ்பூர், சந்த்பூர், ஃபெனி மற்றும் நாராயண்கஞ்ச் உள்பட) கல்வி நிறுவனங்களிலும் வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன.