என்.டி.ஏ.வுடன் தவெக கூட்டணி? மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் நடந்தது என்ன?
என்.டி.ஏ.வுடன் தவெக கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியாகும் தகவல்கள் பற்றி...


தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்டச் செயலர்கள் கூட்டத்தில் பெரும்பாலானோர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாத இறுதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியும், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தொகுதிப் பங்கீட்டில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்முறையாக தேர்தலை சந்திக்கும் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால், இறுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதிப் பங்கீடும் கையெழுத்தாகிவிட்டது.
இறுதியில் தனித்துப் போட்டியிடலாம் என்ற நிலைக்கு வந்த தவெக விஜய், போட்டியிட விருப்பம் தெரிவித்த கட்சி நிர்வாகிகளை பனையூர் அலுவலகம் வரவழைத்து நேர்க்காணல் நடத்தினார்.
இந்த நேர்க்காணலின்போது, அனைவரிடமும் தேர்தலுக்கு குறிப்பிட்ட கோடிகளை (தேர்தல் ஆணையம் நிர்ணயித்த ரூ. 40 லட்சத்தைவிட பல மடங்கு அதிகம்) செலவிட முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வளவு கோடிகளை தங்களால் செலவிட முடியாது என்று விருப்ப மனு அளித்த நிர்வாகிகளில் பெரும்பாலானோர் தலைமையிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நிலைமையை அறிந்த விஜய், கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் அனைத்து மாவட்டச் செயலர்கள் கூட்டத்தை ஏற்பாடு செய்து அவர்களின் கருத்துகளை கேட்க அறிவுறுத்தியுள்ளார்.
அதன்படி, ஆன்லைன் மூலம் தவெக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 130 மாவட்டச் செயலாளர்களில் பெரும்பாலானோர் கூட்டணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் நாளை (மார்ச் 15) விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகலே தனி விமானம் மூலம் தில்லி செல்கிறார் விஜய். இன்றிரவு பாஜக தலைவர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், இணையத்தில் வெளியாவது யூகங்கள் மட்டுமே, கட்சியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுகள் என்று தொண்டர்களுக்கு தவெக இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதேபோல், தில்லி செல்லும் விஜய், பாஜக தலைவர்களை சந்திக்கவில்லை, சிபிஐ விசாரணைக்காக மட்டுமே செல்கிறார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 50 தொகுதிகள் வரையிலும், துணை முதல்வர் பதவியையும் விஜய் கேட்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை கூட்டணி இறுதி செய்யப்பட்டு, தவெக கேட்டபடி தொகுதிகளை பங்கிட்டால், அதிமுக 130-க்கும் குறைவான தொகுதிகளிலேயே போட்டியிட நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...