

சென்னை முழுதும் உள்ள அம்மா உணவகங்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் ஊறுகாய் உள்ளிட்ட அத்யாவசியப் பொருட்களை சப்ளை செய்வது நூற்றாண்டுப் பழமை வாய்ந்த திருவல்லிக்கேணி நகர்ப்புறக் கூட்டுறவு சமுதாயம் தான் (TUCS). இதுவரை அம்மா உணவகத்தின் பழைய பாக்கித் தொகையின் மீது போதிய கவனமின்றி இருந்த TUCS தற்போது ரூபாய் நோட்டு விவகாரத்தின் பின் வழக்கத்தை விட அம்மா உணவகங்களின் வருவாய் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து அம்மா உணவகங்களின் பழைய வருவாய் பாக்கிகளை வசூலிப்பதில் மிகுதியாக ஆர்வம் காட்டத் தொடங்கி இருக்கிறது. நிலுவையில் இருக்கும் பாக்கித் தொகையை செலுத்தச் சொல்லி அம்மா உணவகங்களுக்கு உத்தரவிடுமாறு TUCS சென்னை மாநகராட்சிக்கு கடிதம் எழுதி இருக்கிறது.
நமது நாட்டில் நுகர்வோர் விநியோக முறை தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் இருந்தே TUCS சகாய விலையில் காய்கறிகள், மளிகைப் பொருட்கள் மற்றும் மது உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வந்தது. அந்த வகையில் TUCS தொடங்கப் பட்டு 112 வருடங்கள் ஆகின்றன. மது விற்பனை தாராள மயமாக்கப் பட்ட பின் தற்போது TUCS காமதேனு எனப்படும் அரசு சூப்பர் மார்கெட்டுகளையும், சமையல் கேஸ் விநியோக அங்காடிகளையும், பொது விநியோக முறைக்கு உட்பட்ட சுமார் 300 ரேஷன் அங்காடிகளையும் நிர்வகித்து வருகிறது.
2013 ஆம் ஆண்டில் அம்மா உணவகம் தொடங்கப் பட்ட காலத்தில், காய்கறிகள் மற்றும் அத்யாவசியப் பொருட்கள் சப்ளைக்கு TUCS உடன் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது, அதன்படி TUCS சென்னை முழுதும் உள்ள சுமார் 400 அம்மா உணவகங்களுக்குத் தேவையான பொருட்களை அந்தந்த மண்டல அலுவலகங்களில் விநியோகித்து விட்டு, சப்ளை செய்யப்பட்ட பொருட்களுக்கான ரசீதுகளை ஒவ்வொரு வார இறுதியிலும் நகராட்சி அலுவலகத்தில் சமர்பித்து வந்தது. நகராட்சி அலுவலகம் பாக்கித் தொகையில் 75 % வார இறுதிக்குள்ளும், மீதத் தொகையை ரசீதுகளைச் சோதித்த பின்னும் வழங்குவது என்பது தான் ஒப்பந்தத்தின் சாரம். அதன்படி அம்மா உணவகம் கணக்கில் 75% க்கான தொகை முறையாக வசூலாகி விட்டதென்றும், மீதமுள்ள 25% தில் இதுவரை 18 கோடி ரூபாய் நிலுவையிலுள்ள பாக்கி என்றும் TUCS தெரிவித்துள்ளது.
ரூபாய் நோட்டு விவகாரத்தின் பின் தற்போது நாட்டில் நிலவி வரும் சில்லறைப் பற்றாக்குறையில் தங்களது முதன்மை நுகர்வோர்களான அம்மா உணவக நிர்வாகத்தினர் பழைய பாக்கிகளை செட்டில் செய்து விட்டால் பொது விநியோகச் சேவையில் தங்களது பிற வாடிக்கையாளர்களுக்கு TUCS ன் சேவைகள் எப்போதும் போல தடையின்றி வழங்கப் படும் என TUCS அதிகாரி தெரிவித்துள்ளார்.
TUCS தெரிவித்த மேற்கண்ட புகாரை மறுத்த மாநகராட்சி மூத்த அதிகாரி “ முறைப்படி ரசீதுகள் அனைத்தும் செட்டில் செய்யப் படுவதாகவும், அவர்கள் குறிப்பிட்ட பாக்கித் தொகையில் 3 கோடி ரூபாய் சமீபத்தில் செட்டில் செய்யப்பட்டு விட்டதாகவும், மிச்சமுள்ள தொகைகளும் அடுத்தடுத்து உடனடியாக செட்டில் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த மாத ஆரம்பத்தில் இருந்தே சென்னை மாநகராட்சி ரூபாய் நோட்டு விவகாரத்தால் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. இதனால் மாநகரின் முக்கியமான உட்கட்டமைப்பு வேலைகள் பலவும் சரிவர நடைபெறாமல் பணிகளில் தேக்கம் நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.