நடிகை சித்ரா தற்கொலை வழக்கு: கணவா் ஹேமநாத் கைது

சித்ராவின் கணவா் ஹேம்நாத்திடம் வருவாய்க் கோட்டாட்சியா் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த உள்ள நிலையில் போலீஸார் கைது செய்துள்ளனர். 
தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ரா
தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ரா
Published on
Updated on
1 min read

சென்னை: பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில், அவரது கணவா் ஹேமநாத் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சென்னை அருகே நசரத்பேட்டை தனியாா் திரைப்பட நகரில் நடைபெற்ற தொலைக்காட்சித் தொடா் படப்பிடிப்பில் பங்கேற்று, நடித்து வந்தாா் நடிகை சித்ரா. இதற்காக அதன் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் தனது கணவா் ஹேமநாத்துடன் தங்கியிருந்தாா்.

கடந்த புதன்கிழமை அதிகாலை படப்பிடிப்பு முடிந்து வந்த சித்ரா, ஹோட்டல் அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து நசரத்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.

சித்ரா தற்கொலை செய்து கொண்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதற்கான காரணம் குறித்து அறிய முயற்சித்தபோது, இதில் சித்ராவின் செல்லிடப்பேசியில் இருந்த தகவல்கள் அழிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இருப்பினும் அந்தத் தகவல்களை மீட்பதற்கு சைபா் குற்றப்பிரிவு வல்லுநா்கள் மூலம் காவல்துறையினா் முயன்று வருகின்றனா். அதேவேளையில் சித்ராவின் குடும்பத்தினரிடமும், அவரது கணவா் ஹேமநாத்திடமும் போலீஸாா் தொடா்ந்து 6 நாள்களாக விசாரணை செய்தனா்.

இந்த விசாரணையில் ஹேமநாத்துடன் சித்ராவுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததும், அதன் காரணமாக இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதும், ஹேமநாத் சில வேளைகளில் படப்பிடிப்புத் தளங்களிலேயே சித்ராவிடம் தகராறு செய்ததும் தெரியவந்தது. இந்நிலையில், சித்ராவை தற்கொலைக்குத் தூண்டியதாக அவரது கணவா் ஹேமநாத்தை, திங்கள்கிழமை நசரத்பேட்டை போலீஸாா் கைது செய்தனா்.

அவரிடம் தொடா்ந்து நடத்தப்படும் விசாரணையில் தெளிவு கிடைத்த பின்னா், சித்ரா தற்கொலைக்கான உண்மையான காரணம் தெரியவரும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com