அரியலூர்: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பணியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆட்சியர் அலுவலகம் மூன்று நாள்களுக்கு மூட ஆட்சியர் த.ரத்னா உத்தரவிட்டார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முதல் தளத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு (கோ.ஆப்ரேட்டிவ்) துணைப் பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு களப்பணியாளராக பணிபுரியும் ஒருவர் பெரம்பலூரிலிருந்து வந்து செல்கிறார். அவரது மனைவி பெரம்பலூரில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.
அவருக்கு கடந்த 7 ஆம் தேதி சளி, காய்ச்சல் காரணமாக எடுக்கப்பட்ட ரத்த பரிசோதனையில், கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், அரியலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டுறவு துணைப் பதிவாளர் அலுவலகத்தில் களப்பணியாளராக உள்ள அவரது கணவருக்கு ரத்தப் பரிசோதனை செய்ததில் அவருக்கும் கரோனா தொற்று இருப்பது இன்று (ஜூலை.11) உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மூன்று நாள்களுக்கு தாற்காலிகமாக மூட ஆட்சியர் த.ரத்னா உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி இன்று நடைபெற்று வருகிறது.