கோவை: கோவை தெற்கு சட்டப்பேரவை உறுப்பினரின் மகள், மருமகன் மற்றும் பேத்தி ஆகிய 3 பேருக்கு கரோனா இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை (தெற்கு) சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணனின் மகள் (32), மருமகன் (38) மற்றும் பேத்தி (11) மூன்று பேரும் கடந்த சில நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்காக மதுரைக்கு சென்று இரண்டு நாள்களுக்கு முன் கோவைக்கு திரும்பியுள்ளார்.
மதுரையில் கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் எம்.எல்.ஏ. அவரின் மனைவி, மகன், மகள், மருமகன், பேத்தி ஆகிய 6 பேரும் தாமாக முன்வந்து கரோனா பரிசோதனை செய்து கொண்டனர். இதில் சட்டப்பேரவை உறுப்பினரின் மகள், மருமகன் பேத்தி ஆகிய 3 பேருக்கும் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள 3 பேரும் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.