திருப்பூர்: திருப்பூர் மாநரின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக இயங்கிய டாஸ்மாக் பார்களில் அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக டாஸ்மாக் பார்கள் இயங்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள பார்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெற்று வருவதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, டாஸ்மாக் மண்டல மேலாளர் செளந்தரபாண்டியன் தலைமையில் அதிகாரிகள், காவல் துறையினர் காந்திநகர், 15 வேலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள 10க்கும் மேற்பட்ட பார்களில் வியாழக்கிழமை அதிகாலை திடீர் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், பார் ஊழியர்கள் 6 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.