புதுச்சேரி: இந்திய நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் 'பிட் இந்தியா விடுதலை ஓட்டம்' என்ற மாணவர்கள் விழிப்புணர்வு ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தவகையில், புதுச்சேரியில் அரசு சார்பில் விடுதலை ஓட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடல் முன்பு தொடங்கிய 'பிட் இந்தியா விடுதலை ஓட்ட'த்தினை மாநில கல்வி அமைச்சர் ஏ. நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் க.லட்சுமி நாராயணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
இதில், 75 விளையாட்டு வீரர்கள் தேசியக் கொடிகளுடன் கலந்துகொண்டு, விழிப்புணர்வு ஓட்டத்தை மேற்கொண்டனர். அரசு செயலர்கள், அலுவலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் நேரு யுவகேந்திரா சார்பில் புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை எதிரே விடுதலை விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. அதனையும் கல்வியமைச்சர் ஏ. நமச்சிவாயம் தொடங்கிவைத்தார். நேரு யுவகேந்திரா இளையோர்கள், மாணவர்கள் பலர் இந்த விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொண்டனர்.
நாட்டின் 75 ஆவது சுதந்திர நாளை நினைவுப் படுத்தி போற்றும் வகையில் இந்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.
இந்த ஓட்டத்தின் வாயிலாக, மக்கள் உடற்பயிற்சி மற்றும் உடல் ஆரோக்கியம் பெற வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.