பஞ்சாபின் லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவா் உயிரிழந்தாா்; 5 போ் காயமடைந்தனா்.
பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. காங்கிரஸ், முன்னாள் முதல்வர் அமரீந்தர்-பாஜக கூட்டணி, சிரோமணி அகாலிதளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தோ்தல் போட்டியில் உள்ளன.
இதையும் படிக்க | நாட்டில் புதிதாக 6,650 பேருக்கு கரோனா தொற்று
இந்நிலையில், லூதியானா மாவட்ட கீழமை நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமை நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் லூதியானாவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் தேர்தலுக்கு முன் அமைதியைக் குலைக்க மேற்கொள்ளப்பட்ட சதி எனத் தெரிவித்தார்.
இத்தகைய சம்பவங்களை மேற்கொள்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்திய அரவிந்த் கேஜரிவால் இத்தகைய சம்பவங்களை மேற்கொள்பவர்களின் எண்ணங்கள் வெற்றிபெற மக்கள் அனுமதிக்கக் கூடாது எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,“முதல்வர் சன்னி தலைமையிலான அரசு மிகவும் பலவீனமான அரசு.காங்கிரஸ் கட்சிக்குள் உள்முரண்பாடுகள் உள்ளன. பஞ்சாபிற்கு வலுவான மற்றும் விரைந்து செயல்படக்கூடிய அரசு தேவை. பஞ்சாப் மாநில அரசு நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் செயல்படாவிட்டால், இதுபோன்ற சம்பவங்கள் தொடரும். ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபில் வலுவான அரசை உருவாக்கி, இதுபோன்ற குற்றங்களுக்கு மூளையாக செயல்பட்டவர்களை தண்டிக்கும்” எனத் தெரிவித்தார்.