தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றிய நிலையில காபூலிலிருந்து வெளியேறியது திடீர் முடிவு என ஆப்கன் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் ஆப்கனிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள் அந்நாட்டைக் கைப்பற்றினர். அதனைத் தொடர்ந்து நிலவிய அசாதாரண சூழலைத் தொடர்ந்து முக்கிய தலைவர்கள், ராணுவ அதிகாரிகள், மக்கள் என பலரும் ஆப்கனை விட்டு வெளியேறினர்.
அன்றைய அதிபராக இருந்த அஷ்ரப் கனி விமானத்தில் தப்பியோடினார். தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் தஞ்சம் புகுந்துள்ள அவர் பிரபல தனியார் செய்தி நிறுவனத்திற்கு சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் காபூலிலிருந்து வெளியேறுவது என்பது 2 நிமிடத்தில் எடுக்கப்பட்ட முடிவு எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | ஜன. 12ல் மதுரையில் நடைபெறும் பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
ஆப்கானிஸ்தானின் காபூலைக் கைப்பற்ற தலிபான் முன்னேறி வருவதை அறிந்த நேரத்தில் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற தான் முடிவெடுத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் நாட்டை விட்டு வெளியேறும்போது எங்கு செல்வது என்பது தனக்கு தெரியாது எனவும், காபூலை விட்டு வெளியேறுவது மட்டுமே அப்போதைய நோக்கமாக இருந்ததாகவும் அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | வருமான வரித் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்
அஷ்ரப் கனியின் முடிவு விமர்சனத்திற்குள்ளான நிலையில் பெட்டிகளில் அடைக்கப்பட்ட பணத்தை தான் எடுத்துச் செல்லவில்லை எனவும் அவர் விளக்கமளித்துள்ளார்.