சசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக ஜெ. நினைவிடம் திறப்பு: தினகரன்
சசிகலா விடுதலையைக் கொண்டாடும் விதமாக தமிழகத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்று பெங்களூரு - பரப்பன அக்ரஹாராத்தில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா இன்று (ஜன.27) விடுதலை செய்யப்பட்டார்.
இதையும் படிக்கலாமே: 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா!
அவரைக் காணச் சென்ற டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, சசிகலாவை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை பெற்று முடிவு செய்யப்படும்.
நிர்வாகிகள், தொண்டர்கள் சசிகலா வருகைக்காக காத்திருக்கின்றனர். அவரது வரவேற்பு தமிழகத்தில் சிறப்பானதாக இருக்கும் என்று கூறினார்.
ஜெயலலிதா நினைவிடத் திறப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், சசிகலாவின் விடுதலையை கொண்டாடும் விதமாக தமிழகத்தில் ஜெயலலிதா நினைவிடம் திறக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.
அதிமுக - அமமுக இணையுமா என்ற கேள்விக்கு அரசியல் பேச விரும்பவில்லை என்றும், சசிகலா விடுதலையான மகிழ்ச்சியில் தற்போது இருப்பதாகவும் தினகரன் கூறினார்.