தமிழ்நாட்டின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபுவை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு காவல்துறை தலைவர் திரிபாதி நாளையுடன் ஓய்வு பெற உள்ள நிலையில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
ரயில்வே காவல்துறை தலைவராக தற்போது பணியாற்றி வரும் சைலேந்திரபாபு நாளை டிஜிபியாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் சிறப்பாகப் பணியாற்றியதாக அறியப்படும் சைலேந்திரபாபு சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படை ஐஜியாகவும் பணியாற்றியவர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை சேர்ந்த சைலேந்திரபாபு 1987ஆம் ஆண்டு இந்திய காவல் பணியில் இணைந்தார். குடியரசுத் தலைவர் பதக்கம், பிரதமர் விருது, வீரதீர செயலுக்கான முதல்வர் பதக்கம் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களை வென்றவர்.
கடலூர், திண்டுக்கல் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ள சைலேந்திரபாபு சென்னை அடையாறில் துணை ஆணையராக செயல்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.