அரக்கோணம்: வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி யாஸ் எனும் புயலாக மாறப் போவதாக வந்த அறிவிப்பினை தொடர்ந்து முன்னெச்சரிக்கை மீட்புப் பணிக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையின் 4 குழுவினர் சென்னை மற்றும் அந்தமானுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டு சென்றனர்.
மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது.இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக 24ந்தேதி மாறும் எனவும் அப் புயலுக்கு யாஸ் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் இப்புயல் காரணமாக சென்னை மற்றும் தெற்கு அந்தமான் மேலும் வடக்கு அந்தமான் ஆகிய இடங்களில் பலத்த மழை செய்யக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையினரை அனுப்ப அப் படையின் அரக்கோணம் படைத் தளத்திற்கு தமிழகம் மற்றும் அந்தமான் அரசுகள் கோரிக்கை விடுத்தன. இதையடுத்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்பு படைத் தளத்தில் இருந்து அதன் முதுநிலை கமாண்டர் ரேகா நம்பியார் உத்தரவின் பேரில் தலா 25 பேரை கொண்ட படை குழுவினர் இரண்டு குழு சென்னைக்கும் ஒரு குழு அந்தமானை அடுத்த மாயாபந்தருக்கும் ஒரு குழு டிக்லிப்பூருக்கும் புறப்பட்டு சென்றனர். அந்தமானுக்கு செல்லும் குழுக்கள் சென்னையில் இருந்து விமானம் மூலம் அந்தமான் செல்கின்றனர்.
இக்குழுவினர் தங்களுடன் வெள்ளத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற உதவும் மற்றும் கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கும் நபர்களை காப்பாற்றும் அதிநவீன கருவிகளையும் அதிநவீன தகவல்தொடர்பு சாதனங்களையும் கொண்டு சென்றுள்ளனர். மேலும் யாஸ் புயல் தகவல்கள் மாநில அரசுகளின் கோரிக்கைகளை பெறுவதற்காக 24 மணி நேர கட்டுப்பாட்டறை மைய வளாகத்தில் திறக்கப்பட்டுள்ளது.