திருப்பூரில் முள்புதரில் வீசப்பட்ட பெண் சிசு மீட்பு
By DIN | Published On : 29th July 2021 12:22 PM | Last Updated : 29th July 2021 12:22 PM | அ+அ அ- |

திருப்பூர் சிவன் தியேட்டர் அருகில் உள்ள முள்புதரில் வீசப்பட்ட பெண் சிசுவை மீட்ட பொதுமக்கள்.
திருப்பூர்: திருப்பூரில் பிறந்து சில மணி நேரத்தில் முள்புதரில் வீசப்பட்ட பெண் சிசுயை அப்பகுதி பொதுமக்கள் வியாழக்கிழமை மீட்டனர்.
திருப்பூர் புதியபேருந்து நிலையத்தை அடுத்த சிவன் தியேட்டர் அருகில் உள்ள முள்புதரில் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் முள்புதரில் சென்று பார்த்தபோது துணியில் சுற்றி பெண் குழந்தை வீசப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, குழந்தையை மீட்ட பொதுமக்கள் திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், பிறந்து சில மணி நேரங்களேயான பெண் குழந்தை என்பது தெரியவந்தது. இதுகுறித்து சைல்டு ஹெல்ப் லைன் அதிகாரிகளும் குழந்தையின் பெற்றோர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.