தமிழகத்தில் நேரடி தேர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட் கைதான மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
கரோனா தொற்று பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் இணைய வழியில் வகுப்புகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன.
இதையும் படிக்க | ஆஸ்திரியாவில் மீண்டும் அமலாகும் பொதுமுடக்கம்
இந்நிலையில், பருவத் தேர்வுகளை நேரடியாக நடத்தக்கூடாது எனவும், தேர்வுகளை இணைய வழியில் மட்டுமே நடத்த வேண்டும் எனவும் கூறி மாநிலத்தின் பல்வேறு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து அனைத்து பல்கலைக் கழகத்திற்கும் உயர்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியது. அதில் தமிழக உயர்கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து கல்லூரிகளுக்கும் பருவத் தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் எனவும், அனைத்து கல்லூரிகளுக்கும் இது பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பேசிய அமைச்சர் பொன்முடி நேரடித் தேர்வை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும் நேரடித் தேர்வை எழுத கால அவகாசம் தேவை என்கிற மாணவர்களின் கோரிக்கையைக் கவனத்தில் கொண்டு ஜனவரி 20ஆம் தேதிக்கு பின் தேர்வுகள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.