இந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைக் கொண்டாடுவது ஆபத்தானது என நடிகர் நசிருதீன் ஷா கவலை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து அந்நாட்டின் மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நிலவி வரும் அரசியல் சூழலைக் குறிப்பிட்டு பல்வேறு தரப்பினரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க | இளையராஜாவுடன் இணையும் இயக்குநர் பா.ரஞ்சித்?
இந்நிலையில் பிரபல இந்தி திரைப்பட நடிகர் நசிருதீன் ஷா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இதுதொடர்பாக காணொலி பதிவிட்டுள்ளார். அதில் அவர், “ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததைக் கொண்டாடுவது ஆபத்தானது என இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்கள் உணர வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உலகம் முழுவதும் கவலைக்குரியதாக இருந்தாலும், இந்திய இஸ்லாமியர்கள் சிலரின் காட்டுமிராண்டிகளின் கொண்டாட்டங்கள் ஆபத்தானவை” எனத் தெரிவித்துள்ளார்.
“இஸ்லாத்தில் சீர்திருத்தம் மற்றும் நவீனத்துவம் வேண்டுமா அல்லது கடந்த சில நூற்றாண்டுகளின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் தொடர வேண்டுமா என்று ஒவ்வொரு இந்திய இஸ்லாமியர்களும் தங்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்” என நசிருதீன் ஷா தனது பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.